Wednesday, April 2, 2014

வேர்க்கடலை


வேர்க்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான், இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்துவருகின்றது ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது .
காரணம் வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்றபடியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு இரத்தத்தில் மிக மிக குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் மெக்னீஷியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது. ஆகவே இவர்கள் அன்றாட உணவில் தைரியமாக வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.
வேர்க்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக ரத்த கொதிப்பு குறையும். வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது.
இவை வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது ,மேலும் இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பெருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாக்காமல் தடுக்கிறது. வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது ஆகவே கர்ப்பிணிகள் கூட வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது.
வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும் ஏனெனில் அதில்தான் நிறையச் சத்துகள் அடங்கியுள்ளது.மேலும் வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம்.பொதுவாக உடல் எடையை குறைப்பவர்கள் நொறுக்கு தீணிக்கு பதிலாக வேர்க்கடலையை சாப்பிடலாம், ஏனெனில் இவை சாப்பிட்ட திருப்தி விரைவிலேயே கிடைப்பதால் மேலும் மேலும் எதையாவது சாப்பிட்டு உடல் எடையைக் கூட்டும் நிலை வராது. ஆனாலும் இதில் உடல் எடையைக் கூட்டும் புரத சத்து அதிகமிருப்பதால் அளவோடு சாப்பிடுவது தான் இவர்களுக்கு நல்லது.இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது
வேர்க்கடலையில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் புற்றுநோய், உருவாகக் காரணமாகும் செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவுகிறது.வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன (ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம்).
அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுவதால் அது தொடர்புடைய நோய்கள் குறைந்து விடுகிறது.இதில் முக்கியமாக தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், சிறு நீராக கோளாறு மற்றும் ஒவ்வாமை பிரச்சனைகள் உள்ளவர்கள் இக்கடலையை தவிர்த்துவிடலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனையை கேட்பது நல்லது.
உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும். வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது. எனவே, குழந்தைகள் வளர்ச்சி தடையின்றி இருக்க நிலக்கடலை நல்லது.
சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில்தான் இருக்கிறது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது.மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.இதனால்தானோ என்னவோ எளிமையாக வாழ்ந்த காந்திஜி தேவையான அளவு உடலுக்கும், மனதிற்கும் சக்திபெற வேர்கடலையும் ஆட்டுப்பாலும் சாப்பிட்டு வந்தார்.எல்லாவிதமான இரத்தப்போக்குகளையும் இது தடுக்கும். பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வேர்கடலையாகும்.
பெருந்தீனிக்காரர்களும், உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சீனி சோக்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.
வயிற்றுப்போக்கு உடனே கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது உடல் அழகும், இதயப் பாதுகாப்பும்.வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல் முன்கூட்டியே தடுப்பதுடன், பளபளப்பான தோலையும் ஏற்படுத்தித் தருகிறது. படிக்கும் மாணவ, மாணவியர் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஞாபக மறதி ஏற்படாது என்கிறார்கள், உணவு ஆய்வாளர்கள். வேர்க்கடலையில் உள்ள உயிர்வேதிப்பொருட்கள் நரம்பு செல்களை நன்கு செயல்படத் தூண்டும். இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள பார்க்கிஸன், அல்ஸமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும்.
மேலும், நரம்பு சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலும் வேர்க்கடலைக்கு உண்டு. வேர்க்கடலையில் 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன.
இதில் புரதம் அதிகம். வேர்க்கடலையில் மேல் இருக்கும் தோலில் அதிக சத்துக்கள் உள்ளதால் அதனை நீக்காமல் சாப்பிடுவது அவசியம்.நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை `கிளை செமிக் இன்டெக்ஸ்’ என்பார்கள். இது வேர்க்கடலையில் மிகவும் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.
மேலும், வேர்க்கடலையின் மேல் உள்ள பிங்க் கலர் தோலுக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.அதுமட்டுமின்றி, வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை துரிதப்படுத்தும் சக்தி உள்ளது.
கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது. வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன. ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.
இதனால் வேர்க்கடை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும். தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா ?
ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.வேர்க்கடலையைச்சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.

ஆடுகள் தொடாத இலை


கற்ப மூலிகை ஆடாதோடை/ஆடாதோடா/Adhatoda zeylanica
மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள்.
ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது. சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது. கிராமப்புற மக்களும் சரி, அங்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களும் சரி, ஆடாதோடை இலையை அதிகம் பயன்படுத்துவார்கள்.
மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும். இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும். இது சுவாசக் காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. நுரையீரல் நன்கு செயல் பட்டால்தான் இரத்தம் சுத்தமடையும். இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர். இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. .
நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதோடை இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள். இது உடனடி நிவாரணமாகும்.
நீண்ட நாள் தொடந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.
இவைகளுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.
இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும். இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும். ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
மேற்கண்ட முறைப்படி 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகாது.

சித்த மருத்துவத்தின் அடிப்படைகள்


சித்த மருத்துவத்தின் அடிப்படைகள் நவீன அறிவியலோடு ஒத்த அமைப்பில் உருவானவை. ஆழ்ந்து நோக்கும் போது அறிவியலின் அளவை ஏரணத்திலிருந்து (Logic) எந்த விதத்திலும் மாறுபடாதவை. காண்டல் (Observation), கருதுதல் (Inference), கருதுகோள் (Hypothesis), என்னும் மூன்று வகுதைகள்(பிரமாணங்கள்; Factors) அடிப்படையானவை. ஒப்புறை, எதிருறை, கலப்புரை என்னும் மூன்று நிலைகளிலும் சிகிச்சை அளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. (சித்தமருத்துவம். பக்.9)
சித்த மருந்தியல் தத்துவத்தின்படி, உடலானது ஐம்பூதங்களாலும், பூதங்களின் தொகுதியான மூன்று உயிர்த்தாதுகளாலும் (வாதம், பித்தம், ஐயம்) ஆனது. இம்மூன்று தாதுகளும் இயற்கைப் பிறழ்ச்சியாலும், உணவாதிக் குறைகளாலும், கோள்களின் பேதங்களாலும், தம் நிலை பிறழும் போது முக்குற்ற நிலை அடையும். வாதம், பித்தம், ஐயம் என்னும் மூன்றின் நிலைப்பிறழ்ச்சியால் நோய்கள் தோன்றுகின்றன. வாதம் இயக்கும் (Starter), பித்தம் இயங்கும் (Accelerator), ஐயம் நிறுத்தும் (Break), மூன்றில் எது பழுதடைந்தாலும் வாழ்வின் பயணம் தடைப்படும். இந்நிலைப் பிறழ்ச்சியால் உடலில் ஏற்படும் மாறுதல்களை நாடிகளின் நடையைக் கொண்டு நோயின் நிலை கணிக்கப்படுகிறது. மருந்துகளிலும் வாத மருந்து, பித்த மருந்து, ஐய மருந்து என்ற பிரிவுகள் உள்ளன. இக்கருத்து இன்றைய அறிவியலோடு ஒத்ததே. சித்த மருத்துவம் சிறந்த தருக்க நெறியில் அமைந்த அறிவியல் என்பதை அறிவியலாரும் ஒப்புக் கொள்கின்றனர். (தமிழ்ச் சுவடிகளில் குழந்தை மருத்துவம். பக்.30 31)
நஞ்சை அமுதாக்கும் வித்தையை நம் சித்தர்களிடம் காண்கிறோம். நவபாடாணங்களில் ஒன்றான நாபி (Acconitum ferox) ஒரு பொல்லாத நஞ்சு. அதனைக் கோமூத்திரத்தில் இடுவதன் முன்னரும், இட்ட பின்னரும் வேதியல் நிலையில் சோதித்துப் பார்த்தனர். 24 மணி நேரம் கோநீரால் சுத்தியடைந்த நாபி இதயத்தை ஊக்குவிக்கிறது. அதற்கு முன், இதயத்துடிப்பை, குருதி அழுத்தத்தைக் குறைத்து உயிரைக் கொன்று விடுகிறது. மாஸ்கர் (Masker), காய்ஸ் (Caius) என்பவர்கள், 1937இல் செய்த சோதனையில், நாபியில் அடங்கிய அக்கோனிடின் (Aconitine) கோநீரால் தீமை குறைந்த அக்கோனிடினாக மாறுகிறது என்று கண்டு பிடித்தனர். வேதியல் மாற்றம் கோநீரால் ஏற்படுவதை அறியும் போது, சித்தர்களின் சுத்திமுறை அறிவியல் முறையில் அமைந்த ஒன்று என்பதால், சித்த மருத்துவமும் அறிவியல் மருத்துவம் என்று கூறலாம்.

தூக்க மாத்திரை அதிகம் சாப்பிடுவதால் வரும் பாதிப்புகள் :-


வேலை பார்க்கும் அனைவருக்கும் இருக்கும் பிரச்னைகளில் ஒன்று தான் தூக்கமின்மை.சிலருக்கு வேலைப் பளு, ஆரோக்கியமில்லா லைப் ஸ்டைலினால் தூக்கம் வராமல் தவிக்கின்றனர். அதனால் சில பேர் தூக்க மாத்திரை சாப்பிடுவார்கள். இந்த தூக்க மாத்திரை சாப்பிடுவதால் உடம்புக்குத் தான் கேடு வரும்.
• தூக்க மாத்திரை ஒரு போதைப் பொருள் மாதிரி, அதை அடிக்கடி சாப்பிட்டால் நாம அதுக்கு அடிமை ஆகிவிடுவோம். அப்புறம் நமக்கு நார்மலா தூக்கம் வந்தா கூட தூக்க மாத்திரை போடாம, நிம்மதியா தூங்க முடியாது, தூக்கமும் வராது.
• தூக்க மாத்திரை சாப்பிட்டால் நாம் சுவாசிப்பதில் பிரச்சனை வரும். மேலும் ஆஸ்துமா, சுவாசக் கோளாறு பிரச்சனை இருக்கிற நபர்கள் தூக்க மாத்திரை சாப்பிட வேண்டாம்.
• சிலர் தூக்க மாத்திரையை ஜூஸ் அல்லது ஆல்கஹாலில் கலந்து சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் ஆபத்தானது. மேலும் ஆல்கஹாலில் கலந்து சாப்பிட்டால், சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம். முக்கியமாக தூக்க மாத்திரையை திராட்சை பழ ஜூஸ் கூட சாப்பிட வேண்டாம்.
• தூக்க மாத்திரை சாப்பிட்டால் அடிக்கடி காலையில் தலைவலி, மயக்கம், சோர்வு, அதிக தாகம் போன்றவை ஏற்படும்.
• தூக்கம் அதிகம் வருவதால், பசியைக் கூட மறந்து விடுவோம். இதனால் உடலில் உள்ள சக்தி குறைந்து, தலைச் சுற்றல், உடலில் நடுக்கம் போன்றவை ஏற்படும்.
ஆகவே தூக்க மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடாதீர்கள்..

பேரீச்சையின் மருத்துவ பயன்பாடு :-


உலகின் பழமையான நாகரீகமான மெசபடோமியாவில் தான் பேரீச்சம்பழம் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எகிப்திய பிரமிடுகளிலும், கிரேக்க, ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும் இடம்பெற்றுள்ள பேரீச்சம் பழம், கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் சத்துப்பழமாக உலக மக்களால் உண்ணப்பட்டு வருகிறது. பேரீச்சம்பழத்தின் மருத்துவக் குண பெருமைகள்...
* ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டிய அருமையான பழம்.
* தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப் பெறும்.
* தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.
* ஏதாவது காயத்தால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் ரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.
* பேரீச்சம்பழச் சாறு பருகுவது, ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
* பேரீச்சம்பழத்தை அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து சாப்பிட்டு வர, எலும்புகள் வலுப்பெறும், உடல் வலிமை கூடும்.
* தினமும் இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு, வெந்நீர் அருந்தினால், மலச்சிக்கலை ஏற்படுத்தும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி, மலம் சுலபமாக வெளியேறும்.
* பேரீச்சம்பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட்டால் வாதம், பித்தம், முட்டி வீக்கம் போன்றவை குணமாகும்.
* பேரீச்சம் கொட்டையையும் வறுத்துப் பொடி செய்து காபி போல பால், சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது.
* பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக்கடுப்பால் அவதியுற நேரலாம். அவர்களுக்கு பேரீச்சம் பழத்தை குழைய வேக வைத்து, வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை கொடுத்தால் பேதிநிற்கும்.

Thursday, March 20, 2014

மருத்துவ ரகசியம்!.



அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா? நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்......ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன.இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.
இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்....

Wednesday, March 19, 2014

என்றும் இளமை

"கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசிகுலாவி நடப்பானே"
சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய்களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.
சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.
நிலம்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம், என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும், ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப் பதால் நடுவில் உள்ள நீர், நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.
வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு.
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு.
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு.
இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.
வாதம் - காற்று - 1, மாத்திரை அளவு -- சுக்கு.
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு -- இஞ்சி.
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -- கடுக்காய்.
இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,
சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் , நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.
சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.
சுக்கு சுத்தி ;
தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும். பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் . இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.
கடுக்காய் சுத்தி ;
கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.
இஞ்சி சுத்தி ;
இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .
இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.
உண்ணும் முறை :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.
மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.
இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும்.
இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.
பழமொழி :
கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.
ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை