Showing posts with label நவக்கிரகங்களை இடம் மாற்றியமைத்த இடைக்காட்டுச் சித்தர். Show all posts
Showing posts with label நவக்கிரகங்களை இடம் மாற்றியமைத்த இடைக்காட்டுச் சித்தர். Show all posts

Monday, December 23, 2013

நவக்கிரகங்களை இடம் மாற்றியமைத்த இடைக்காட்டுச் சித்தர்

நவக்கிரகங்களை இடம் மாற்றியமைத்த இடைக்காட்டுச் சித்தர்

இடைக்காடர் திருமாலின் அவதாரம் என்பது சிலரது கருத்து. இவர் தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டு (இடையன் மேடு) என்னும் ஊரில் பிறந்தவர் என்று கூறுவர். இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஆடுகளை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் சிந்தை ஒடுங்கியவராய் சிவயோக நிலையில் நின்று விடுவார்.

இவர் இவ்வாறு நின்று கொண்டிருக்கையில், ஒருநாள் வான் வழியாய்ச் சென்று கொண்டிருந்த சித்தர் ஒருவர், இடைக்காடரைப் பார்த்து கீழே இறங்கி வந்து, “மகனே! நீ எதைப் பற்றிய சிந்தனையிலிருக்கிறாய்?” என்றார். சுயநினைவுக்கு வந்த இடைக்காடர், அந்த சித்தரை வணங்கி, பால் முதலியன கொடுத்து தாகம் தீர்த்தார். மனம் மகிழ்ந்த சித்தர் இடைக்காடருக்கு வைத்தியம், சோதிடம், ஞானம், யோகம் முதலியவற்றை உபதேசித்து சென்றார். அன்று முதல் இடைக்காடர் சித்தர் ஆனார். தனது சோதிடத்திறமையால் இன்னும் சிறிது காலத்தில் பனிரெண்டு வருடங்கள் பெரும் பஞ்சம் வரப்போடும் நிலையை அறிந்தார்.

முன்னெச்சரிக்கையாக எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தன் ஆடுகளுக்கு தின்னப் பழக்கினார். கெடாமல் இருக்கக் கூடிய குறுவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார். இடைக்காடர் எதிர்பார்த்த படியே பஞ்சம் வந்தது. உயிரினங்களும் புல், பூண்டுகளும் அழிந்தன. எருக்கிலை போன்ற அழியாத தாவரங்களை ஆடுகள் தின்று உயிர் வாழ்ந்தன. எருக்கிலை தின்றதால் ஏற்பட்ட தினவைப் போக்க ஆடுகள் சுவரில் முதுகைத் தேய்க்கும். அப்பொழுது உதிரும் குறுவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு இடைக்காடர் உயிர்வாழ்ந்தார். பெரும் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்தொழிய இடைக்காடரும் அவரது ஆடுகளும் உயிருடனிருப்பதைப் பார்த்து வியந்த நவக்கிரகங்கள் இடைக்காடரைக் காண வந்தனர்.

இடைக்காடர் மிகவும் மகிழ்ந்து விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்று ஆட்டுப்பாலையும் வரகு சாதத்தையும் அவர்களுக்கு வழங்கினார். பாலில் சமைத்த சாதத்தை உண்டு அந்த மயக்கத்தில் அப்படியே உறங்கி விட்டனர். நவக்கிரகங்கள் மயங்கி கிடப்பதைக் கண்ட இடைக்காடர், மாறுபட்டு உலகத்தை வருத்திய கோள்களை மழை பெய்வதற்கு ஏற்றவாறு மாற்றிப் படுக்க வைத்தார்.

உடனே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. ஆறுகளும் ஏரிகளும் நிரம்பின. பூமி குளிர்ந்தது.

மழையின் குளுமை உணர்ந்து நவக்கிரகங்கள் விழித்துப் பார்த்தனர். நாட்டின் பஞ்சத்தை நீக்கிய சித்தரின் அறிவுத்திறனை கண்டு வியந்து பாராட்டினார்கள். அவருக்கு வேண்டிய பல வரங்களைத் தந்து ஆசீர்வதித்து சென்றார்கள். இடைக்காடர் நெடுங்காலம் வாழ்ந்து வருடாதி நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவற்றை எழுதினார். மேலும் இவர் தத்துவப் பாடல்களளயும் இயற்றினார். மிகவும் செருக்குடன் இருந்த ஏக சந்தக் கிராகி, துவி கந்தக் கிராகி போன்றவர்களை “ஊசி முறி” என்ற சங்கப்பாடல் மூலம் அடக்கினார்.

இவருடைய காலம் சங்க காலம். இடைக்காடரின் ஞானசூத்திரம் -70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார்.