Showing posts with label மூலிகை வயாகரா வேண்டுமா?. Show all posts
Showing posts with label மூலிகை வயாகரா வேண்டுமா?. Show all posts

Monday, December 23, 2013

மூலிகை வயாகரா வேண்டுமா?



சித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை. அது போலவே அனைத்து நோய்களையும் போக்கும் சர்வரோக நிவாரணிகளை கண்டு பிடிப்பதில் தான் சித்தர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதிகளை பயன்படுத்தினர். ஆண்மையை அதிகரிக்கச்செய்வதோடு சர்வரோக நிவாரணியாக அனைத்து நோய்களையும் தீர்க்கும் தண்ணீர் விட்டான் கிழங்கின் மகத்துவம் நம்முடைய சித்தர்கள் மட்டுமல்ல வடநாட்டு ஞானிகளும் அறிந்துள்ளனர்.

வளரியல்பு

அல்லி குடும்ப(Lilliaceae) தாவரமான தண்ணீர் விட்டான் கிழங்கின் அறிவியல் பெயர் அஸ்பாரகஸ் ரெசிமோசஸ்(Asparagus Recemouses ) என்பதாகும். வேலிகளில் படர்ந்து வளரும் இலைகள் முட்களாகவும் நுனி கிளைகளே இலைகளாகவும் உருமாறியுள்ளன. முழுத்தாவரமும் அடர்த்தியான பச்சை நிறம் கொண்டவை. வேர்கிழங்குகள் சதைப்பற்றும் அதிக நீர்தன்மையும் கொண்டவை. வேர்கிழங்குகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனப்பெருக்கம் அடைகின்றன. நிலத்தடியில் கொத்து அவரைக்காய்கள் போல வேர்கள் காணப்படுகிறது. வடமொழியில் சதாவரி என்று அழைக்கப்படுகிறது.

தண்ணீர் விட்டான் கிழங்கின் இரசாயன அமைப்பு.

தண்ணீர் விட்டான் கிழங்கின் மருத்துவ குணத்திற்கு காரணன் அவற்றில் காணப்படும் பாலிபீனல் மூலப்பொருள்களும் அசபராஜின் என்ற நைட்ரஜன் காரப்பொருளும் தான்.

மருத்துவ குணங்கள்.

பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுபடுத்துகிறது. தாய்பால் சுரத்தலை அதிகப்படுத்துகிறது. உடலினை உறுதியாக்கி ஆண்மையை அதிகரிக்கசெய்கிறது. உடல் உள்ளுருப்புகளின் புண்களை ஆற்றுகிறது. முக்கியமாக அல்சர் எனப்படும் வயிற்று புண்களுக்கு மிகச்சிறந்த மருந்து தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகும். பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி இருப்பதால் தண்ணீர்விட்டாண் கிழங்கை வடநாட்டு ஞானிகள் நூறு நோய்களின் மருந்து எனப்பொருள்படும் சதாவரி (சதா= நூறு , வரி = நோய்களின் மருந்து ) என பெயரிட்டுள்ளனர்.

அழகுதாவரம் தண்ணீர்விட்டன் கிழங்கு.

தண்ணீர் விட்டான் கிழங்கின் வெண்மை நிற பூக்கள் மிகவும் வசீகரமானவை. சில சிற்றினங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வீட்டிலும் பூங்காவிலும் அழகிற்காக வளர்க்கப்படுகிறது. அழகிற்காக வளர்கப்படும் சிற்றினங்களில் வேர்கள் பெரியதாக காணப்படுவது இல்லை.

தண்ணீர் விட்டான் கிழங்கு ஆரோக்கிய பானம் தயாரிப்பு.

நான் கூறப்போகும் ஆரோக்கிய பானம் தயாரிப்பு முறை இந்திய மருத்துவ கழகம் வெளியிட்ட இந்திய மருத்துவ முறைகள் என்னும் நூலினில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.

பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளை தோல் நீக்கி இடித்து சாறு எடுக்க வேண்டும். ஒரு கோப்பை சாறுடன் ஒரு தேக்கரண்டி சர்கரை கலந்து காலையில் பருக வேண்டும். இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். தண்ணீர் விட்டான் கிழங்குகள் பல்வேறு பகுதிகளில் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும்.